இஸ்லாத்தில் இறைவன் ஏன் மனிதனாக அவதாரம் எடுக்கவில்லை?(கேள்வி-பதில்)
Saturday, April 7, 2007
கேள்வி:இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை?
பதில்:நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ கோழிப்பண்னையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும் ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.
இருக்கின்ற தகுதியை விட குறைந்த தகுதிக்கு இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்கமாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார்? இழிவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதுதான் எந்த வகையில் நியாயமானது? இப்படி சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்பட்டுவிடும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். நான் தான் கடவுள் அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி ஏமாற்ற நினைத்தால் எளிதில் ஏமாற்றி விட முடியும். கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் ஏமாற்ற முடியும். அவர்களைச் சுரண்டமுடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெலலாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.கடவுள் மனிதனாக வரவேமாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களை தவிர்களாம் .
இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்ட வேண்டும். உண்ணவேண்டும் பருகவேண்டும் மலஜலம் கழிக்கவேண்டும். மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபடவேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்கவேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப்பேர் இன்றைக்கு பூமியில் இருக்கவேண்டும். ஆனால் ஒரே ஒரு கடவுளின் பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. அதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்கத் தகுதியானதும் அல்ல என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
கேள்வி:முஹம்மது என்ற சொல்லுக்கு புகழுக்கு உரியவர், புகழப்பட்டவர் என்பதாகப் பொருள் உண்டு. ஆனால் அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே என்றுதான் திருமறையில் அல்லாஹ் கூறுகிரான். பதில்:! அல்லாஹ்வின் பண்புகளில் அனேகமான பண்புகள் மனிதர்களிடமும் உள்ளன.கேட்பவன், பார்ப்பவன்இ அறிபவன்இ இரக்கமுள்ளவன் என்பன போன்ற தன்மைகள் இறைவனிடமும் உள்ளன. மனிதர்களிடமும் உள்ளன. ஒரு மனிதனை பார்ப்பவன் என்று கூறினால் அல்லாஹ்வின் பண்புகளை அவனுக்கு வழங்கியதாக ஆகாது. மனிதர்களிடம் உள்ள இப்பண்புகளுக்கும் அல்லாஹ்விடம் உள்ள இதே பண்புகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன.
குறிப்பிட்ட தொலைவில் குறிப்பிட்ட அளவு வெளிச்சத்தில் இருந்தால் தான் மனிதனால் பார்க்க முடியும். எதுவும் தடுக்காமல் இருந்தால் தான் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றைத் தான் பார்க்க முடியும் என்றெல்லாம் மனிதனின் பார்க்கும் திறன் பலவீனமாக உள்ளது. எங்கே இருந்தாலும், எந்தத் தடை இருந்தாலும் இருட்டாக இருந்தாலும் இறைவன் பார்ப்பான். ஒரு நேரத்தில் முழு பிரபஞ்சத்தையும் அவனால் பார்க்க இயலும். மனிதனைப் பற்றி பார்ப்பவன் எனக் கூறும் போது இறைவனைப் போல் பார்ப்பவன் என்று கருதிக் கொண்டால் அது குற்றமாகிவிடும். இணை கற்பித்தலாகி விடும். மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள அளவுக்கு பார்ப்பவன் என்று கருதிக் கொண்டு இவ்வாறு பயன்படுத்தினால் குற்றமாகாது. இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகனின் அலி என்ற பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றவில்லை. அலி (உயர்ந்தவன்) என்பது அல்லாஹ்வின் பெயராகவும் உள்ளது. மனிதனுக்கும் பெயர் வைக்கலாம். இரண்டுக்கும் கருத்தில் வித்தியாசம் உள்ளது. முஹம்மது என்பதும் இது போன்றது தான். இறைவன் எவ்வாறு புகழப்படு கிறானோ அது போல மனிதனும் சில வேளை புகழப்படுகிறான். ஒருவர் நமக்கு உதவி செய்யும் போது அவருக்கு நாம் நன்றி கூறுவது கூட அவரைப் புகழ்வது தான்.
மனிதனைப் பற்றி புகழப்பட்டவன் என்று கூறினால் ஏதோ ஒரு சில காரியங்களைப் புகழத்தக்க வகையில் செய்திருக்கிறான் என்று பொருள். அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு கூறினால் அவனது அனைத்து நடவடிக்கைகளும் புகழத்தக்க வகையில் உள்ளன என்பது பொருள். இந்த அடிப்படையில் தான் முஹம்மத் என்ற நபிகள் நாயகத்தின் பெயரை இறைவன் அனுமதிக்கிறான்.